சென்னை: நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில், புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜாமின் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனுமீதான விசாரணையின்போது காவல்துறையினரின் மாறுபட்ட தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்,  நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வடிவேலு என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர்  தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரணை நடத்தினார். விசாரணையின் போது ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம் ஆஜராகி,   சிறையில் உள்ள வடிவேலு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், மற்றொரு காவல் நிலைய வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருப்பதையும், ஏற்கெனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்ததையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதற்கு வடிவலு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அரசு வழக்கறிஞர் கூறியதுபோல ஏதும் இல்லை என கூறி அதற்கான விளக்கத்தை எடுத்துரைத்தார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதி,  காவல் நிலையங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்று அதிருப்தி தெரிவித்ததுடன்,  இந்த வழக்கு  தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு  உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து  இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று  (ஜனவரி 23ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையராகப் பொறுப்பு வகிக்கும், மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிச்சரண் நேரில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி, அதிநவீன தொழில்நுட்பம் உள்ள இந்த காலகட்டத்திலும் ஒரே சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் ஒருங்கிணைப்பு இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆதங்கம் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில், புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்  எனவும் வலியுறுத்திய நீதிபதி, விசாரணையை ஜன.31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.