சென்னை
ஈரோட்டில் பாஜகவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ் புதிதாக கட்டிய இந்திரா பவன் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகிற வகையில் இருப்பதாக கூறி வடகிழக்கு மாகாணமான அசாம் மாநிலம், கவுகாத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் அளித்துள்ள புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.
இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாளை (22.01.2025) காலை 11.00 மணியளவில் ஈரோடு மாநகரில் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம், தலைவர் ராகுல் காந்தி மீது தொடுத்திருக்கும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை முறியடிக்க, இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் திரண்டு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.”
எனத் தெரிவித்துள்ளார்.