சியால்டா
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரக் கொலை வழக்கில் சஞ்ச்ய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். சினிமாத் துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அவர் அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் நிலையில், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த உச்சநீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது. இந்த வழக்கு சியால்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன் தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இன்று அதன்படி தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது.
நீதிபதி இரு தரப்பு வாதத்தையும் பதிவு செய்தபின் தண்டனையை அறிவித்தார். பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்., பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்