சென்னை: தமிழ்நாட்டில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கும், 14 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், தாலுகா நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை சுட்டிக்காட்டி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். விரைந்து, காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.