சென்னை: திராவிடியன் மாடல் அரசில்,  கடல்தாண்டி ஆசிரியர்களும், மாணவர்களும் கல்விச்செல்வம் பெற உதவிய அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை, அமைச்சர்அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் , 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம் என குறிப்பிட்டு அது தொடர்பான படங்களை பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்துள்ள முதல்மைச்சர் ஸ்டாலின், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் – ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது  திராவிடியன் மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!

இந்தப் பதிவு குறித்து நான் தம்பி அன்பில் மகேஸ்  அவர்களிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் – இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார்.

இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது! இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அன்பில் மகேசுக்கும்,   அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில்  குறிப்பிட்டுள்ளார்.