புவனேஸ்வர்: ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி  மற்றும் தானியங்களுக்கான ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார்.

ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வரில் உள்ள கிடங்கில் நிறுவப்பட்ட இந்த இயந்திரத்தை ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா தொடங்கி வைத்தார். அதிகாரப்பூர்வமாக அறியப்படும் அன்னபுர்தி கிரெய்ன் ஏடிஎம், வெறும் ஐந்து நிமிடங்களில் 50 கிலோ வரை தானியங்களை விநியோகிக்கும் திறன் கொண்டது,

இந்த ஏடிஎம் இயந்திரத்தில்,  அரிசி ஏ.டி.எம்.,ல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு, 25 கிலோ அரிசி வரை பெற்று கொள்ளலாம்.  இதன் காரணமாக, ரேசன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்கும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா,” பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்.,. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏ.டி.எம்.,யை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.