சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி உள்ளது, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கூலிப்படையினரை கொண்டு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.  தமிழ்நாட்டில் நடப்பாண்டு, கடந்த 6 மாதங்களில், 595 கொலைகள்… தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை!’ அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது” என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். அதுபோல,  தமிழ்நாட்டில் கடந்த  ஒரு மாதத்தில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டில்,  கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது.”

“தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.”

“இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.

புதிதாகப் பதவியேற்ற டிஜிபி திரு. அருண் அவர்கள், உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று கூறினார்.” “ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.”

“டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம்,  தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்,”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்