சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு  விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை ஒருபுறமும், அரசின் டாஸ்மாக் மது விற்பனை மறுபுறமும் ஜோராக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி வருபவர்களும் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனையில் , அதை வாங்கி குடித்த ஏழை மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 66 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து உயிருக்கு கேடு விளைவிக்காத கள் விற்பனை அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்கப்படுகிறது, ஆனால் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மட்டும் கிடைக்கிறது. மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கள் விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி  தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினர். தொடர்ந்து கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும், டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜுலை 29-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.