கேனக்கல்

ர்நாடகாவில் தொடர்ந்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்ட நிலையில் மற்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35,997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை அது வினாடிக்கு 36,674 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.60 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாக இருந்தது. கபினி அணையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 29,310 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 33,640 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அது நேற்று காலை வினாடிக்கு 33,625 கனஅடியாக குறைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

கபினி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.