ரூர்

நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதையொட்டி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

நேற்று நில மோசடி வழக்கில் கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை காவல்துறைகைது செய்து அவரை கரூர் அழைத்து வந்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்து நேற்றிரவு நிறைவு பெற்றுள்ளது. அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்ப உள்ளார்.