மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொடூர சம்பவம் மதுரை அமைச்சர்  பிடிஆர் வீடு அருகே நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, மதுரை வடக்குத்தொகுதி துணைச்செயலாளரா இருந்து வந்தார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்றனர்.  அதிகாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகிலேயே இந்த கொலை செய்யப்பட்டது.  4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. .

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆகும் நிலையில், மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில்  கொலை, போதைப்பொருள் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில், பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக தமிழ்நாடு கூலிப்படைகளின் தாயகமாக திகழ்கிறது என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.