மயிலாடுதுறை:  தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக  தலைமறைவாக இருந்த ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை தனிப்படை போலீசார் கைத செய்துள்ளனர்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனமாக மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சாமிகள் இருந்து வருகிறார். இவரமீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சிலர் சுமத்தி மிரட்டல் விடுத்து பணம் கேட்டதாக  கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ஆதீனகர்த்தரின் முன்னாள் உதவியாளர் செந்தில், சீர்காழி பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் குடியரசு, செம்பனார்கோ வில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செய்யூர் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் சீனிவாஸ், திருச்சியை சேர்ந்த பிரபாகர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர், அவர்கள் 9 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மிரட்டல் தொடர்பாக,  தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத் உள்பட 4  பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த 5 பேரை தனிப்படை அமைத்துதேடி வந்தனர். இதில், தற்போது ஆதினத்தின் முன்னாள் உதவியாளர் செந்தில் என்பவர் வாரணாசியில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்னும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.