டெல்லி

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.5700 கோடி வரி பகிர்வை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு நாட்டில் வசூலாகும் வரி தொகையை, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக் கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், அருணாசல பிரதேசத்துக்கு ரூ.2,455 கோடியும், அசாமுக்கு ரூ.4,371 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது.

அதிக அளவாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.10 ஆயிரத்து 513 கோடியும், மகராஷ்டிராவுக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது”.

என்று கூறப்பட்டுள்ளது.