டெல்லி: தென் மாநிலங்களின் உரிமைகளை  மோடி கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு பாதுகாப்பார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தென்மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், எம்.பி. தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றுள்ளது.  இதைத்தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.  தொடர்ந்து, இண்டியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இருவரும் டெல்லி சென்ற நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் டெல்லியில் நடைபெற்ற  இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் சென்றார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். . அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் மத்திய அரசியலில் முக்கிய பங்காற்றுவார்,  என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.