சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள தமிழக மாவட்டங்கைன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும்  நாளையும்  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது.

நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும்  9 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது”

என்று கூறப்பட்டுள்ளது.