சென்னை

திமுக வேட்பாளர் கனிமொழி தனது தேர்தல் வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் வைத்து வனங்கி மரியாதை செலுத்தி உள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.

வாக்குகள் நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. திமுக வேட்பாளர் கனிமொழி அனைத்து சுற்றுகள் முடிவில் 5,40,729 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்றார். அதாவது 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கனிமொழி 2-வது முறையாக வாகை சூடினார்.

கனிமொழிக்கு தேர்தல் அதிகாரியான ஆட்சியர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார். நடந்து முடிந்த தேர்தலில் கனிமொழியை தவிர அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி சமாதியில் கனிமொழி தனது வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து வணங்கி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.