சென்னை:  சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், சில கோடை மழையும் கொட்டி வருகிறது. இந்த நிலையில், மும்பையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  (மே 13ந்தேதி) புழுதி புயல் வீசியது. இதில், மும்பை  மாநகரின்,  பல பகுதிகளில் பலத்த சேதம் அடைந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்த நிலையில், காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பர பலகை  அருகே இருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.  இந்த விபத்தில், பெட்ரோல் பங்கில் ஒதுங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோர்  சிக்கி கொண்டனர். இதில் சிக்கிக்கொண்டவர்களை விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்டனர். இருந்தாலும், 70-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில்,  16 பேர் உயிரிழந்தனர்.  இதையடுத்து நாடு முழுவதும் விளம்பர பலகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மணிக்கு 50 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில்,சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போதுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவைதான். அவற்றை அகற்றி வருகிறோம். உரிய அனுமதி பெற இதுவரை 1100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதனடிப்படையில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதன்படி, இதுவரை மொத்தம் 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. இதில், 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன. மேலும் சில விளம்பர பலகைகள் தொடர்பாக உரிமையாளர்கள் மாநகராட்சியிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் கிடைக்கும். அரசு கட்டிடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்து வருவாய் ஈட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.