சென்னை: மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் இன்று தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியோர்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், 18வது மக்களவை அமைக்கப் படுவதற்காக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி, அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் இன்று தபால் வாக்கு பணி தொடங்கி உள்ளது.
இதையொட்டி, மக்களவை தேர்தல் 2024க்கான தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.
தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திற்னாளி வாக்காளர்களும் உள்ளனர். அதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளி களும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிப்பது எப்படி..?
தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க, தகுதியான வாக்காளர்கள், அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் பொதுவாக தனிப்பட்ட விவரங்கள், வாக்காளர் அடையாளத் தகவல் மற்றும் தபால் வாக்குச் சீட்டைக் கோருவதற்கான காரணம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். இதையடுத்து, தேர்தல் அதிகாரி விண்ணப்பதாரரின் தகுதியை சரிபார்த்து, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தபால் வாக்கு செலுத்த தகுதியானவர்கள் என்று அறிவிக்கும்.
தகுதியுள்ள வாக்காளர்கள் நேரில் வாக்களிக்க முடியாவிட்டாலும், அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் தபால் வாக்குச் சீட்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளிலிருந்து தபால் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நாளில், தபால் ஓட்டுகள் தேர்தல் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை ஆராய்ந்து, யாருக்கு வாக்கு அளித்தார்களோ, அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் கணக்கிடப்படும்.