சென்னை

ன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது.

இன்று தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்க இருக்கிறது. தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளைச் சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.

இந்த தேர்வு 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.  தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள்., 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. 11 ஆம் வகுப்பு  விடைத்தாள்கள் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், 11 ஆம் வகுப்பு அரியர் மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6 ஆம் தேதியில் இருந்தும், இதர மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்தும் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்குகிறது.