சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இனறு  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று தலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்  கடந்த திங்கள் கிழமை (பிப்ரவரி 12ஆம் தேதி) தொடங்கியது.  இந்த  கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் ஆளுநர் உரை, அடுத்த இரண்டு நாள் விவாதம் , அதற்கடுத்து இன்று முதல்வர் பதிலுரை என பட்டியலிடப்பட்டுள்ளது.

பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் பங்கேற்ற  ஆளுநர், தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை வாசிக்க மறுத்து விட்டு,  இந்த சட்டமன்றம் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் கூறி உரையை முற்றிலும் புறக்கணித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை முழுதாக வாசித்ததோடு ஆளுநர் பேசியது சட்டமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்படாது எனவும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதையடுத்து தனது சட்டப்பேரவை உரையை வீடியோவாக வெளியிட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இன்று ஆளுநர்  உரை மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதையடுத்து இன்று ஆளுநர் உரைக்கு பதில் உரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேரவையில் பேசுகிறார்.  இதில் ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று , சட்டப்பேரவையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் மக்களாவை தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்ற தனி தீர்மானங்களைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான பதிலுரையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, நாளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.