டெல்லி: இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பு என்றும், எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறாமல், அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று, நாடாளுமன்ற இறுதி கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கி உள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,  இது மிகவும் மகத்துவமான ஒரு கூட்டத்தொடர். எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக்கூடாது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாளை இடைக்கால பட்ஜெட்டில் பல துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். கடைசி கூட்டத் தொடர் என்பதால் இதனை யாரும் புறக்கணிக்க வேண்டாம்.

ஜனநாயக விழுமியங்களைத் துண்டாடுவதை வழக்கமாகக் கொண்ட எம்.பி.க்கள், தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை சுயபரிசோதனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன்.”

தேர்தலுக்கு பிறகு தமது தலைமையிலான பாஜக அரசு மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது.

குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை பறைசாற்றப்பட்டது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை .

இவ்வாறு கூறினார்.