கொழும்பு
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கேத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரே காரணம் எனக் கூறி இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் ராஜபக்சே சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தில் பெரும் வன்முறைகள் அரங்கேறின. கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்சேவும், ஜூன் மாதம் கேத்தபய ராஜபக்சேவும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். பிறகு ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார்.
நேற்று இலங்கையில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மாநாடு தலைநகர் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் மாநாட்டில்,
“பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டாலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்”
எனக் கூறி உள்ளார்.