காசியாபாத்

காவல்துறையினர் சாலையில் பணத்தை வீசி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

இளைஞர்கள் மத்தியில் தற்போது பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. ஒருசில இளைஞர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லைமீறி வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டும் சம்பவம் பேசு பொருளாகியது.

தற்போது டில்லி அருகே காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த 28ந் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர்கள் 3 பேர் கார் மீது ஏறி நின்று கூச்சலிட்டு ஒரு இளைஞர் தன் கையில் வைத்திருக்கும் பட்டாசைப் பற்றவைத்து வானத்தை நோக்கிக் காட்டுகிறார்.

இன்னொரு இளைஞர் கையில் ரூபாய் நோட்டுகளை எடுத்து சாலையில் தூக்கி வீசுகிறார்.  அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு இளைஞர் சாலையில் நிற்பவர்களைப் பார்த்து கூச்சலிடுகிறார். இவற்றை சாலையில் பொதுமக்கள் சிலர் நின்று பார்ப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.

நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவை  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர்  ‘அதிகாரிகள் கவனத்திற்கு, சட்டம் ஒழுங்குக்குக் கைவிரல் காட்டும் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காணொளி அக்டோபர் 28 அன்று எடுக்கப்பட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

காவல்துறையினர் அந்த 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காசியாபாத் காவல் ஆணையாளர் அலுவலகம் இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில்

‘தற்போது வைரலாக பரவும் வீடியோவில் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’

என்று தெரிவித்துள்ளனர்.