சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில்  உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், சமீபத்தில்  நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயிநதி ஸ்டாலின்,  சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

உதயநிதியின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும்என பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மூவரும் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக  விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் உத்தரவுகளையும் மேற்கோள்காட்டி வாதிட்டார். தொடர்ந்து அவர் வாதிட்டதாவது:

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் இருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

உரிய தகுதியில்லாமல் பதவிவகித்தால் மட்டுமே எந்த தகுதியின்அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கோரி கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சனாதனம் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றுதான் உதயநிதி பேசியுள்ளார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வில்லை என்றும் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்.31-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் சனாதனம் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், அதில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.