டில்லி

இந்திய அரசு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரைக் கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் இது தொடர்பாகக் கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாகக் கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.  எனவே இந்தியா-கனடா உறவில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தற்போது கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெறுப்பு குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.  ஆகவே அந்த நாட்டில் வசித்து வரும் மற்றும் அங்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அங்கு பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவதால், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கனடாவில் இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்குப் பயணிப்பதை இந்தியர்கள் அறவே தவிர்க்க வேண்டும். 

இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகக் கனடா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்.” 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.