டில்லி

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க உள்ளதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.,

மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து  ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன.  கூட்டணியின்  பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

நேற்று  இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் டில்லியில் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் 14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், மாநிலம்வாரியாக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும்  பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, மகாரஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இருக்காது என்று இந்தியா கூட்டணி கருதினாலும் டில்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் சிக்கல் எழும் என்று நினைக்கிறது.   , கூட்டணியின் பிரசார உத்தி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு எந்தெந்த நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க இருப்பதாகவும், எந்தெந்த தொலைக்காட்சிகள் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடகத்தின் ஒரு பிரிவினர் தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, அவரின் நடைப்பயணம் மிகக் குறைந்த அளவிலேயே காட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.

காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டு அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் ஆசிரியர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.