புவனேஸ்வர்

இமாச்சல பிரதேச மாநிலம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒடிசா அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க உள்ளது.

தற்போது இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போனார்கள். பல வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கி மின் விநியோகம், சாலை போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச முதல்வருக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த நெருக்கடியான நேரத்தில் இமாச்சல பிரதேச மக்களுடன் ஒடிசா அரசும், ஒடிசா மக்களும் உறுதுணையாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.