ராஞ்சி

ஜார்க்கண்ட்  உயர்நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் தொடர்பாகப் பேசிய உரை சர்ச்சையானது.  அவர் மீது இந்த உரை தொடர்பாகக் குஜராத்  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மோடி பெயர் அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி மீது ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் பிரதீப் மோடி என்ற வழக்கறிஞர் ஒருவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல்  காந்தி ஜார்க்கண்ட்  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் திவிவேதி, ராகுல் காந்திக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்கும்போது அவர் ஆஜராகவில்லை என்றால் மீண்டும் அவர்களை விசாரிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.