டில்லி

ச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது.

மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா ஆகியோர் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் தந்திரத்தைப் பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையொட்டி, “அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3ஆம் முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் ஆயினும் அவர் ஜூலை 31, 2023 வரை பணியில் தொடர அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஓய்வுபெறும் வயதை அடைந்த பிறகு அமலாக்க இயக்குநராகப் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி நீட்டிப்பு குறுகிய காலத்திற்கு இருக்க வேண்டும் என்றும், 3-வது முறையாகப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது 2021ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.