டெல்லி; மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) எடுக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரம் பெயர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இந்தியாவில் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. இதை யடுத்து காலியான இடங்களக்கு ஜூன் 10ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளன. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதையடுத்து, இன்று மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை  எடுத்து அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் தலைமை மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலியாக உள்ள இடங்களில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பெருவாரியான இடங்கள் உள்பட மொத்தம் 8 மாநிலங்களவை இடங்களை காங்கிரஸ் கைப்பற்று வது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்,  மூத்த தலைவர்ப. சிதம்பரம் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூத்த தலைவர்கள் , குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, அஜய் மாக்கென், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி  உள்பட பலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.