டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இது மக்கள் நல பணியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வராக கருணாநிதியின் ஆட்சியின்போது, 13,500 பேர் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் பல சர்ச்சைகள் எழுந்தன. திமுகவினருக்கு இந்த பணி வழங்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பின்னர், கடந்த , 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த பணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கொரோனா கால கட்டத்தில், வாழ்வதாரம் இழந்துள்ள தங்களுக்கும், அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது.  கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா,  பணியை இழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.