சென்னை

சென்னை கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழக அரசு பொதுமக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.   அதில் ஒன்றாக கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அரசு தடை விதித்திருந்தது.    இதனால் சென்னை நகரின் புகழ்பெற்ற கடற்கரைகளான மெரினா, பெசண்ட் நகர் போன்றவற்றுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது.  கடந்த 28 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி கொரோனா கட்டுப்பாடுகள் பல விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  அதில் குறிப்பாக இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.  அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   மேலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,

“சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தினேன்.  அப்போது பொதுமக்களை அனுமதிக்கலாம் எனவும் அதே நேரத்தில் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்’’

எனத் தெரிவித்துள்ளார்.