பூமிநாதர் திருக்கோவில் (வாஸ்து கோவில்) செவலூர். புதுக்கோட்டை மாவட்டம்.

மூலவர் ; பூமிநாதர்.( சுயம்பு மூர்த்தி)

அன்னை;ஆரணவல்லி அம்மன்.

தீர்த்தம் ; பிருத்வி தீர்த்தம்

அமைவிடம் ; புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ளது.

தல சிறப்பு :

பூகம்ப அபாயம், நிலத்தகராறுகள், தடைப்பட்டுள்ள காரியங்கள்தொழிலில் தடை  கட்டிட வேலைகளில் பாதிப்பு, வீடு கட்டும்போது வேம்பு ஆல் அரசு போன்ற மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம் நீங்கவும் நாகப்புற்றுகளைஅழித்த தோஷம் நீங்கவும் வியாபாரத்தில் நஷ்டம் போன்ற துன்பங்களை அனுபவிப்போர் இங்கு வந்து பூமிநாதருக்குப் பூஜை செய்யலாம்.

இதுதவிர முதுகுவலி, மூலம்,  பிருஷ்டநோய்கள் போன்றவற்றுக்கும் இங்கே விசேஷ பூஜைகள் நடக்கிறது.

தல வரலாறு

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்துள்ளது.   முதல் யுகமான கிருத யுகத்தில்  பூமாதேவி எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தைத் தாங்கும் சக்தியை அதிகரித்துத் தரவேண்டும் என்பதே அவளின் கோரிக்கை.

அவள் முன் தோன்றிய சிவன் திரேதாயுகம்,துவாபரயுகத்தில்  இப்பூமியைத் தாங்கும் சக்தியை தருகிறேன்  ஆனால் கலியுகத்தில் இப்புவியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது உன் பக்தர்கள் உன்னைப் பூஜிப்பதன் மூலமாகவே அந்த வலிமை உனக்குக் கிட்டும் எனக்கூறி மறைந்தார்.

இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடி அலைந்த பூமாதேவி பல சுயம்பு லிங்க தலங்களுக்கு சென்று இறைவனை வணங்கினாள் அவ்வாறு பூமாதேவி வணங்கிய தலமே இந்த  செவலூர் பூமிநாதர். இத்தலத்து லிங்கம் 16 பட்டைகளைக் கொண்டது.

பூமாதேவி இவரைப் பூஜித்தபோது ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு எனப் பலவித காப்புகளைச் சார்த்தியதால் இந்தப் பட்டை உருவானதாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஒவ்வொரு வாஸ்து தினத்தன்றும் பூஜைகள் நடக்கிறது.  பூஜித்த செங்கலை புது வீடு கட்டும் பூமி பூஜையில் வைத்து பூஜித்தால் புது வீடு வேலைகள் தங்குதடையின்றி நிறைவேறும் என்பதற்கு இங்கு வரும் பக்தர்கள் கூட்டமே  சாட்சி.