சென்னை

மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பேருந்துக்காக மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும் பேருந்து நிற்பதற்கு என அறியப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த வேண்டும்.

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பயணிகள் வேறு யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களை இருக்கையில் இருந்து எழ செய்து மாற்றுத்திறனாளியை அமர வைக்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் செய்யக்கூடாது.

மத்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டை கொண்டு 40 சதவீதம் மாற்றுத்திறன் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் உள்ளோர் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மேலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 75 சதவிகித  பயண கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் உத்தரவு இடப்பட்டுள்ளது.