சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு,பொங்க்ல் போனசாக, 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத ன்படி, 1லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை  முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத்தொகை” வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.