டில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக 150 பேர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாபில் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 5ந்தேதி அங்கு சென்ற பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம் செய்த வழியில் சிலர், பாஜகவினர் போராடுவது போல, பாஜக கொடியை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனால் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பிரதமர், தன் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
இதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடின்றி, அம்மாநில அரசியல் கட்சியினரே மாநில முதல்வர் சன்னிமீது கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர். பஞ்சாப் காவல்துறை மற்றும் முதல்வரின் விளக்கங்களை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், உச்சநீதி மன்றமும் விசாரணையை கையில் எடுத்துள்ளது.
அதுபோல, பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக, பஞ்சாப் அரசிடமிருந்து விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
இந்த நிலையில் வேறு வழியின்றி, பிரதமரின் பயண பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பெரோஸ்பூர் மாவட்டம் குல்காரி காவல் நிலையத்தில், அடையாளம் தெரியாத 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக, சட்டப்பிரிவு 283ன் கீழ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.