ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் சூர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிங்கம் வன்னியர்களிடம் மண்டியிட்டு விட்டது என கேலி செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை  அவரது உறவினர் ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். மேலும் நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பார்த்துவிட்டு, நெகிழ்ச்சியுடன் அறிவிப்பு வெளியிட்டு, படத்திற்கு இலவச விளம்பரத்தை உருவாக்கி கொடுத்தார். இதனால் ஜெய்பீம் கதாநாயகர் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படம் குறித்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வந்தன.

ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று தயாரிப்பு நிறுவனம் கூறினார், இந்த படத்தின் பல்வேறு காட்சிகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டு, சாதி, மத மோதல்களை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தின்படி, பழங்குடி ஒருவரை தமிழக போலீஸ் அடித்து கொன்ற வழக்கில் தண்டனை அடைந்த போலீஸ் அதிகாரியின் உண்மையான பெயர் அந்தோணிசாமி என்றும் அவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது.  ஆனால், படத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி  என இந்து பெயரை வைத்துள்ளதாகவும், அவர் வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதுபோல உண்மைக்கு புறம்பாக திரித்து காட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், படத்தில் குருமூர்த்தி உட்கார்ந்து இருக்கும் காட்சியில், அவரது வீட்டில்  அக்னி சட்டி இடம் பெற்ற காலண்டர் பின்னணியில் தொங்க விடப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த அக்னி சட்டி படம், வன்னியர் சங்கத்தின் லோகோ. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், வன்னியர் சமுகத்தினர் ஜெய்பீம் படத் தயாரிப்பாளருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் கடும் கண்டனங்களை எழுப்பினர். இதனால் படம் சில மாவட்டங்களில் திரையிடுவதிலும் சிக்கல் எகழுந்தது. சில பகுதிகளில் சூர்யாவின் ரசிகர் மன்ற போர்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதை அறிந்து பதறிப்போயுள்ள சூர்யா மற்றும் ஜெய் பீம் திரைப்படக்குழுவினர் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்குவதாக உத்திரவதம் கொடுத்த நிலையில், தற்போது  சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அக்னி சட்டிக்குப் பதிலாக லட்சுமி தேவி இடம் பெற்றுள்ளவாறு சாமி படம் மாற்றப்பட்டுள்ளது.

இது சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உண்மையான போராளி போல தன்னை காட்டிக்கொள்ளும் சூர்யா, இந்த விஷயத்தில் பின்வாங்கியது ஏன்? வேணுமென்றே மக்களிடைய பிரச்சினையை உருவாக்க ஜெய் பீம் படக்குழுவினர்  திட்டமிட்டார்களா, ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே சாதி, மத வேறுபாட்டை உருவாக்கி பிளவு ஏற்படுத்த சூர்யா முயற்சிக்கிறாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நடிகர் சூர்யாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இது போன்ற அவமானமெல்லாம் சூர்யாவுக்கு தேவையா? ஒரு தரப்பினர் எதிர்ப்புக்காக சூர்யா பணிந்து விட்டார் என்றும், வரலாற்றை மாற்றி மக்களிடையே விரோதத்தை பரப்பும் வகையில் படம் எடுத்த சூர்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், உண்மை கதை என்று கூறி விட்டு, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது சூர்யாவுக்கு அழகல்ல என்று  கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஜெய்பீம் படம்  காரணமாக மக்களிடையே சூர்யா மீதான மதிப்பு கீழ்த்தரமாக மாறியுள்ளது.

மக்களின் பொழுதுபோக்குக்காக திரைப்படம் எடுப்பது மாறி,  தற்போது, தமிழக  மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலேயே பல்வேறு  திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு  வருகிறது.  ஜாதி மத, இன பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் ஒருபுறம் சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள், மக்களால் மறக்கப்பட்டு வந்த சாதி, இன மோதல்களை மீண்டும் தூண்டும் வகையிலேயே அமைக்கப்பட்டு வருவது தமிழகத்தின் சாபக்கேடாக இருந்து வருகிறது.

ஜாதி மதம் வேண்டாம் என்று கூறும் இன்றைய தலைமுறையினரிடையே மீண்டும் ஜாதியை தூண்டும் வகையிலேயே, பல திரைப்படங்கள், அசூரன், கர்ணம், ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த திரைப்படங்களை காணும் இன்றைய தலைமுறையினரி டையே மறக்கப்பட்டு வரும் சாதி, மத, இனம் குறித்த தகவல்களை மீண்டும் திணிக்கும் வகையிலேயே உள்ளதாகவும், இதனால், தமிழர்கள் மீண்டும் கற்கால சமுதாயத்தை நோக்கி திரும்பும் சூழலே ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால், சாதி, மதம், இனம் குறித்த பேதங்களை தவிர்க்க வேண்டுமே ஒழியே, அதை வளர்க்கும் விதமாக திரைப்படங்கள் உருவாக்கக்கூடாது…