சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறிய கோயில்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பக்தர்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க, அறநிலையத்துறை சார்பில்  நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில்  விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 10ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கொண்டாட தமிழகஅரசு தடை விதித்துள்ளது. அத்துடன் கோவில்களை திறக்கவும் வெள்ளி,சனி, ஞாயிறு தினங்களில்  தடை போட்டுள்ளது. இதை எதிர்த்து,   திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், தமிழகஅரசுக்கு அதற்கு தடை விதித்துள்ளது,  அதனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங் களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும்  உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும்  கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்த அவர், பக்தர்கள் வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை சார்பில், பெற்று அதை  நீர் நிலைகளில் கரைக்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தமிழகஅரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட    நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.