டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக 42,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவரகளில் 29,836 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து, மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி வரும் நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக, அம்மாநில அரசு எடுத்த தவறான முடிவால், அங்கு தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 30ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் பதியப்பட்டுள்ள தொற்று பாதிப்பில் 75 சதவிகித பாதிப்பு கேரளாவிலேயே உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் புதிதாக 42,909 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3,27,37,939 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 34,763 பேர் குணமடைந்தைத் தொடர்ந்து இதுவரை தொற்றில் இருந்து விடுபட்டோர் மொத்த எண்ணிக்கை  3,19,23,405  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை  3,76,324 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,201 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 29,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை  63.43 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.