ண்டிகர்

ஞ்சாப் மாநில காங்கிரஸில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவஜோத் சிங் சித்து இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வந்தது . ஏற்கனவே பஞ்சாபில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு பிரச்சினை மற்றும் குரு கிராந்த் சாஹிப் சர்ச்சை ஆகியவை அமரீந்தர் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான நவஜோத் சித்து அதே விவகாரங்களைக் கையிலெடுத்து அமரீந்தருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தது பஞ்சாப் மாநில காங்கிரஸில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.

பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் காங்கிரஸில் நிலவிக் கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களை வைத்து 2022 தேர்தலில் அக்கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றத் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸின் நிலைமை கைமீறிச் சென்று விட்டதை அறிந்து தற்போது காங்கிரஸ் தலைமை களத்தில் இறங்கித் தீர்வு காண முயற்சிகளைக் கொண்டதால், அடுத்தாண்டு தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரியளவு பின்னடைவு இருக்காது என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து தேர்வு செய்யப்பட்டுள்ள  நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரிலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தும் சித்துவுடன் கரம் கோர்த்து கட்சியை வழிநடத்த முடிவெடுத்திருக்கிறார்.

இன்று காலை பதவியேற்பு விழாவிற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக முதல்வர் அமரீந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தேநீர் அருந்தியது, இத்தனை மாத காலமாகக் காங்கிரஸில் நிலவி வந்த உட்கட்சி பூசல்களுக்கு முடிவுரை எழுதியிருக்கிறது.

சித்துவின் பதவி ஏற்பு விழாவில் அமரீந்தர் சிறப்புரை ஆற்றி உள்ளார்.  அந்த உரையில் அவர், “காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சித்துவுக்கும், செயல் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகள். சித்து, நீங்கள் அடுத்த சில வருடங்களுக்குப் பஞ்சாபை நிர்வகிக்கப் போகிறீர்கள். பஞ்சாபில் தீர்வு காண வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கிறது. நாம் கடந்த 4 வருடங்களாக இணைந்து நெருக்கமாக பணியாற்றி இருக்கிறோம்.

நான் சித்து பிறந்த போது, எல்லையில் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். சித்து இன்று இவ்வளவு பெரிய பதவிக்கு உயர்ந்திருக்கிறார். நாமெல்லோரும் சிந்துவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நாம் பஞ்சாபிற்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும் பாடுபட வேண்டும்.  நமது எல்லையில் பாகிஸ்தான் தினமும்  நம்மைத் தாக்கி வருகிறது. பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து இந்தியாவில் ஊடுருவ முயல்கின்றன. இந்நிலையில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசி உள்ளார்.