சென்னை: ஏழ்மையில் வாடும் எங்களுக்கு அரசு வீடு ஒதுக்கி உதவுங்கள் என ‘ஹரிதாஸ்’ புகழ் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்து உள்ளார்.

தமிழக திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1934ம் ஆண்டே திரையுலகில் புகுந்து கலக்கியவர். நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைக்கொண்டவர்  எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இவர் நடித்த படமான ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3ஆண்டுகள் திரையரங்கில் ஓடி வரலாற்று சாதனை படைத்தது.

1959-ம் ஆண்டு நவம்பரில் சர்க்கரை நோய் காரணமாக 49 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பிறகு, குடும்பத்தில் ஏழ்மை குடிகொண்டது. தற்போது வறுமையில் வாடி வருகின்றனர்.

தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், அவர்கள்மூலம் உதவி கிடைக்கும் என்று நம்பிக்கையில், தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் நேற்று தலைமைச்செயலகம் வந்திருந்து,  முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தான்  சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார். எங்களது குடும்பம் கடும் வறுமையால் வாடி வருகிறது. தற்போது,  சூளைமேட்டில் உள்ள அண்ணண் வீட்டில் வசிக்கிறோம். தற்போதைய கொரோனா தொற்று காரணமாக, தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சிறு சிறுவேலைகளும் முடங்கி விட்டது.   நானும் எங்கள் குடும்பத்தினரும் வேலையையும் இழந்துவிட்டோம்.  தற்போது, நான் செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை.

எனவே தமிழக அரசு எங்களின் நிலையறிந்து,  வீட்டு வசதி வாரியத்தில்  எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம். எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே  எங்கள் பாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இன்றுவரை நன்றியுடன் அவரை நினைக்கிறோம். இன்று முதல்-அமைச்சராக அவரது வாரிசு மு.க.ஸ்டாலின் இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது கையினாலும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மேலும்,எ ங்களுக்கு முன்பு நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன் ஆகியோர் உதவிகள் செய்துள்ளனர். தற்போது தங்கை குழந்தையின் படிப்பு செலவுக்கு நடிகர் சூர்யா உதவுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.