டில்லி

காங்கிரஸின் கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொரோனா தாக்குதலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் சரிவர எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை எனத் தொடர்ந்து விமர்சித்த்ஹு வருகிறார். 

நேற்று காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அவர் மத்திய அரசின்  கொரோனா மேலாண்மை குறித்த வெள்ளி அறிக்கையை வெளியிட்டார்.  ராகுல் காந்தி தனது உரையில், “மத்திய அரசு கொரோனா முதல் மற்றும் 2வது அலையைக் கையாண்ட விதம் பேரழிவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

பிரதமர் மோடி கொரோனா 2ம் அலையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.   மோடி மேற்கு வங்கம் மற்றும் பிற மாநில தேர்தலில் போட்டிப் போடுவதிலேயே குறியாக இருந்து விட்டார்.  அவருடைய கண்ணீரால் சொந்தங்களை இழந்தவர்களின் கண்ணீரைத் துடைத்து விட முடியாது.  எப்போதும் பிரதமரின் கண்ணீர் உயிர்களைக் காப்பாற்றாது.  ஆக்சிஜன் தான் காப்பாற்றும்.

இந்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக வெளியிடவில்லை.  மாறாக இந்த நாடு கொரோனா மூன்றாவது அலைக்குத் தயாராவதற்கு உதவுவதற்காகத் தான்   வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.   இந்த உலகம் மூன்றாவது அலை கொரோனா தாக்கும்  என்பதை நன்கு அறியும்.  ஆனால் மூன்றாவது அலைக்கு பிறகும் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்ற அளவிற்குச் சூழல் உள்ளது.

ஆகவே, கொரோனா மூன்றாவது அலைக்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே 2வது அலை மோசமாக இருந்ததால், 3வது அலையும் மோசமாகவே இருக்கக் கூடும்.  ஆகவே 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.  கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் தடுப்பூசி முக்கிய ஆயுதம் ஆகும்.  எனவே முடிந்த வரையில் சீக்கிரமாக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போடுவதில் ஒருநாள் சாதனை எல்லாம் போதாது. தினசரி மேலும் மேலும் அதிகப்படியானோருக்கு தடுப்பூசி போட வேண்டும்.  மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இதில் பாஜக ஆளும் மாநிலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என பிரித்துப் பார்க்காமல் அனைவருக்கும் போதிய அளவு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசு கொரோனா மரணங்களை மறைக்கிறது. அரசு கூறும் இறப்பு எண்ணிக்கையை விட உண்மையில் இறந்தோர் 5-6 மடங்கு அதிகமாக இருக்கலாம். சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் 2வது அலையில் பலியானவர்களில் 90% பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். பலரும் உயிர் பிழைத்திருப்பார்கள். ஆகவே, 3ம் அலைக்குள் சுகாதார கட்டமைப்புகளை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]