மலப்புரம்: கேரள மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒருவாரத்தில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா  பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், கேரளாவில், சுமார்  9 மாதங்களுக்கு பிறகு, ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.  இடையிடையே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மலப்புரம் பகுதியில் உள்ள  2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

மலப்புரம் மாவட்டத்தின் மாரன்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் உள்ள 600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 150 மாணவர்களுக்கும், 34 ஆசிரியர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதுபோல,   பொன்னனி பகுதியில் உள்ள வன்னாரி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், அங்குள்ள அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில்,  39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த 2 பள்ளிக்கூடங்களும் காலவரையின்றி மூடப்பட்டன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 262 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முறையான. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில், மாணவர்களிடம் முககவசங்களின் பயன்பாடு, வெப்ப நிலை பரிசோதனையை கண்டிப்பாக கடைபிடிக்க கண்காணிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு , மாவட்ட சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.