சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான  ரமலான் பண்டிகை அன்று சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  மத்திய அமைச்சருக்கு தேதியை மாற்றக்கோரி கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

“ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது.

ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சிபிஎஸ்இ-க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.