தேவப்பிரயாகை.
ஸ்ரீ புண்டரீகவல்லித் தாயார் {ஸ்ரீ விமலா } ஸமேத ஸ்ரீ நீலமேகப் பெருமாள் {புருஷோத்தமன், ஸ்ரீ வேணிமாதவன் } தேவப்பிரயாகை திவ்யதேசம், திருக்கண்டமென்னும் கடிநகர், தெஹ்ரி-கார்வால் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலம்.
தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெஹ்ரி-கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு :-
தேவப்பிரயாகையின் சிறப்பைப் பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னி புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று.
திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை என்றாயிற்று.
தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான்.
இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளி கொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.
எம்பெருமான், தாயார் :-
இத்தலத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
தாயாரின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும்.
தீர்த்தம் :-
மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன.
விமானம் :-
மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
சிறப்புகள் :-
பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் அலக்நந்தா ஆறும் பாகீரதி ஆறும் சங்கமிக்கின்றன.
மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப்ரயாகை என அழைக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கு அருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ராமனும் இங்கு தவமியற்றினார்கள்.
ஆழ்வாரால் பாடல் பெற்ற எம்பெருமானை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.
கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.