ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ‘’NECROTIZING EMTEROCOLITIS’’ என்ற நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அந்த குழந்தையின் பெற்றோரிடம், மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது முதல், அந்த குழந்தையின் அப்பாவையும், அம்மாவையும் காணவில்லை.

கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை , மருத்துவமனையில் தான் அவர்கள் இருந்தார்கள். பரிசோதனை முடிவை சொன்னதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பீஷ்ராம்பூர் பகுதியில் உள்ள பாலமு என்ற இடத்தை தங்கள் முகவரியாக கொடுத்திருந்தனர்.
குழந்தையின் தந்தை அளித்திருந்த செல்போனை தொடர்பு கொண்டால் ‘’ நாட் ரீச்சபிள்’’ என்றே பதில் வருகிறது.

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பெற்றோர் சம்மதம் தேவைப்படும் நிலையில்,,அதன் உடல் நிலை மோசம் அடைந்து வருகிறது. இதனால் குழப்பநிலையில் உள்ள டாக்டர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

-பா.பாரதி.