டில்லி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் இணைந்து பிரச்சினையை முடித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாத் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார்.   அதையொட்டி சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அரசு  கவிழும் என அச்சம் ஏற்பட்டது.  இந்நிலையில் இன்று சச்சின் பைலட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தனது குறைகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொடர்ந்து பணியாற்ற விரும்புவதையும் கூறி உள்ளார்.   இதற்கு ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு 3 நபர் குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.  இந்த குழு உறுப்பினர்கள் சச்சின் பைலட் தெரிவித்த விவகாரங்கள் மற்றும் அதிருப்தி உறுப்பினர்கள் கருத்தை ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவிக்க உள்ளனர்.