டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையினரின் 9வது சம்மனையும்  டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.  ஏற்கனவே அமலாக்கத்தறை விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என்று  கூறிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராக மறுத்தார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. மாறாக அமலாக்கத்துறை வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்,  நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அமலாக்கத்துறை, டெல்லி ஜல் போர்டு வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 50ன் கீழ் கெஜ்ரிவாலுக்கு  மீண்டும்  சம்மன் அனுப்பியது.  அதில் மார்ச் 18ந்தேதி (இன்று )  அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அமலாக்கத்துறை அனுப்பிய 9வது சம்மன் ஆகும். ஆனால், இதற்கும் ஆஜராக போவதில்லை   அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியிருந்தார்.

இநத் நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய  சம்மன் சட்டவிரோதமானது என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்ற பிறகு எதற்காக இப்படி ஒரு சம்மன் அனுப்பப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியவர், இந்த விசாரணைக்கு தான் ஆஜராக போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.