மத்திய பிரதேசம்:

த்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பலர் சொந்த ஊர்களில் வேலையில்லாமல் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த ஊரடங்கினால் அவர்கள் சொந்த ஊருக்கே செல்லலாம் என நினைத்து ஆங்காங்கே நடந்தும், லாரிகளிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த இடங்களுக்கு தொழிலாளிகள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் உள்ள கேன்ட் பி.எஸ் பகுதியில் நேற்று இரவு லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பீகாரிலுள்ள சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் நெடுஞ்சாலையில் சென்றபொழுது, அவர்கள் மீது அரசு பேருந்து ஒன்று நேற்றிரவு மோதியது.  இதில், 6 பேர் பலியாகினர்.
விபத்தில் பலியான 14 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.  காயமடைந்தோருக்கு 50 ஆயிரம்  ரூபாய் வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.