பெங்களூரு

நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக சுமார் 72.72% வாக்குப்பதிவுடன் நடந்துள்ளது.

நேற்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற‌து. இங்கு 2.67 கோடி  ஆண்கள், 2.64 கோடி பெண்கள் என 5.31 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.  கர்நாடகா மாநிலம் முழுவதும் 58,282வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.  இவற்றில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன‌.

நேற்றைய தேர்தல் பணியில் 3.51 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி படக்கருவி பொருத்தப்பட்டு  இணைய வழியாகக் கண்காணிக்கப்பட்டது.   தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய காவலர், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 1.56 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டன‌ர்.

இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயச் சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம்207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கின. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613  வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட‌னர்.  குறிப்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

தவிர கோலார் தங்கவயலில் இந்தியக் குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் சார்பில் தங்கராஜ்  ஆகியோரும், புலிகேசி நகரில் பாஜக சார்பில் முரளி, சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்குப் பரவலான செல்வாக்கு இருப்பதால், இந்த கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் நேரடி மோதல் உள்ளது. இந்த தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படுவதால் இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.

தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். இந்த தேர்தலில் முதல்முறையாக, 80 வயதைக் கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 29-ம் தேதியில் இருந்து மே 8-ம் தேதி வரை நடைபெற்று அதில் 94,326 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியநிலையில் காலை முதலே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இரவு 10.30 மணி நிலவர கணக்கீட்டின்படி சுமார் 72.22 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாகத் தெரிவித்துள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாக்கு எண்ணும் மையங்களில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகி பிற்பகலில்  இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.